பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவு : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் இன்று மறைந்தார்.

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற முத்தான திரைப்படங்கள் என்றென்றும் அவரது புகழை பரப்பும் இந்தியத் திரைப்படங்கள் ஆகும். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கி கெளரவித்தது.

 

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார்.

நடிகர் கமலஹாசன் நடித்த ‘குருதி புனல்’, அஜித்துடன் ‘முகவரி’, பார்த்திபன் நடித்த ‘காக்கைச் சிறகுகளே’, விஜய் நடித்த ‘பகவதி’ நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ என அண்மைக்காலம் வரை பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.இயக்கம், நடிப்பு இரண்டிலும் தனித்துவம் கொண்ட கே.விஸ்வநாத் நடிகர் கமலுக்கு மிகவும் பிடித்த மனிதர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் கடந்த பிறந்தநாள் அன்று கே. விஸ்வநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

1965இல் இருந்து சினிமா துறையில் இயக்குனர், நடிகர் என பிஸியாக இருந்த கே.விஸ்வநாத் வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 92 ஆவது வயதில் கே.விஸ்வநாத் காலமானார். இவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் சினிமா உலகில் பன்முக படைப்பாற்றலைக் கொண்ட தலைசிறந்த இயக்குநர். அவரது படங்கள் பல தசாப்தங்களாக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

கே.விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்; காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத் அவர்கள் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பியான திரு. கே. விஸ்வநாத் அவர்கள், நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுடன், 5 தேசிய விருதுகள், 7 நந்தினி விருதுகள், 10 ஃப்லிம்பேர் விருதுகள், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் விருது என எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று, திரைவானில் புகழ் நட்சத்திரமாக மின்னி வருபவர்.

 

அவரது பெரும் புகழ் பெற்ற “சங்கராபரணம்” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அதே நாளில் திரு. கே. விஸ்வநாத் அவர்கள் மறைந்திருப்பது, அவரது தீராத கலைத்தாகத்தை காலக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிச் செல்லும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது. சிரிசிரி முவ்வா, சிப்பிக்குள் முத்து, சுருதியலயலு, சுபசங்கல்பம் என மேலும் பல உன்னதமான திரைப்படங்களை, பல மொழிகளிலும் இயக்கிய திரு. கே.விஸ்வநாத் அவர்கள், 24-க்கும் மேற்பட்டதிரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

திரு. கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு, இந்தியத் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.