கண்ணூர்: கேரள மாநிலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கண்ணூர் நகர காவல் ஆணையர் அஜித்குமார் கூறியது: கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரிஜித் (35), அவரது மனைவி ரீஷா (26). ரீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிஜித் உறவினர்களுடன் அவரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது கார் தீப்பிடித்தவுடன் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் தீ கார் முழுவதும் பரவியதில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். பின்னால் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் தெரிவித்தார்.