நீதிமன்றத்துக்கு எதிராக கருத்து: துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

சமீப காலமாக நீதித்துறையின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துவிட்டது. அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே விமர்சனம் செய்கின்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுஆகியோரும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து, அவர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அகமத் அப்டி என்பவர் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், `துணை ஜனாதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை பொது இடத்தில் குறைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அரசியல் சாசனத்தில் இருப்பவர்கள் அதன் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

மும்பை உயர் நீதிமன்றம்

இந்திய அரசியல் சாசனத்தின் மீதுதான் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர். துணை ஜனாதிபதி, நீதித்துறையை தாக்குவது அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சாசனத்தையே தாக்குவதாகும். இதே போன்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நரிமன் தெரிவித்துள்ள கருத்தில், சட்ட அமைச்சர் எந்த வித ஆதாரமும் இல்லாமல் நீதித்துறைக்கு எதிராகவும், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்திருக்கிறார். சட்ட அமைச்சரும், துணை ஜனாதிபதியும் நீதித்துறையையும், அடிப்படை கட்டமைப்பின் கோட்பாட்டையும் வெளிப்படையாக தாக்குகின்றனர். எனவே இருவரும் தற்காலிகமாக அரசு பணியாற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும். அதோடு இருவரும் அரசியல் சாசனம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைக்காத இருவரின் பதவியையும் பறிக்கவேண்டும். சட்ட அமைச்சர் கிரண் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் மூலம் நிரப்பப்படுவதற்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசின் பங்கும் இருக்கவேண்டும் என்று கூறி வருகிறார். துணை ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.