சென்னை: “அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, திமுகவை எதிர்த்து திமுகவை வீழ்த்த ஒரு வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல ஒரு யோசனை. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால், அதுபற்றி பேசலாம். ஆனால் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (பிப்.3) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “நாங்கள் வந்து மற்றவர்களைப் போல வீம்புக்காகவோ, அகங்காரத்திலோ ஆணவத்திலோ இருக்கிற கட்சி கிடையாது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். யதார்தத்தை உணர்ந்தவர்கள். நல்ல ஒரு முயற்சி திமுகவை வீழ்த்த எடுக்கப்பட்டால், நாங்களும் அதைப்பற்றி யோசிப்போம். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு வேட்பாளரை அறிவிப்பது போன்ற ஒரு வாய்ப்பு இருந்தால் அதுபோல் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, திமுகவை எதிர்த்து திமுகவை வீழ்த்த ஒரு வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல ஒரு யோசனை. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால், அதுபற்றி பேசலாம். ஆனால் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்த ஆட்சிக்கு எதிராக பெரியதொரு எதிர்ப்புணர்வு இருக்கிறது. இதை எதிர்கட்சிகள், குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாக தங்களை நினைப்பவர்கள் கடந்தமுறை செய்த தவறை திரும்ப செய்யாமல், மீண்டும் எல்லோரும் ஓர் அணியில் கூட்டணியில் இணைந்து நம்மைப் போலவே திமுகவை எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தி திமுகவை எதிர்த்தால் அந்த அரக்கத்தனமான திமுக கூட்டணியை வீழ்த்த முடியும்” என்று அவர் கூறினார்.