ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு அதிமுகவின் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரண்டு அணிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. இந்த வழக்கு விசாரணையின்போது அதிமுவின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்த தேர்தல் ஆணையம், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்தது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரிடமும் நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பினர் இருவரும் சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பெயரை அறிவிக்க தாங்கள் தயார் என தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், இது நல்ல யோசனையாக இருக்கிறதே என தெரிவித்தபோதும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும், நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வைத்த கோரிக்கையை முன்வைத்தனர். அதனை ஓபிஎஸ் நிராகரித்ததுடன் பொதுவேட்பாளரை ஏற்க தயார் என கூறினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதிமுகவின் வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டனர். இது மேலும் அதிமுகவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுக்குழுவை யார் கூட்டுவது? ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் தொடர்கிறதா? என்ற சிக்கலையெல்லாம் இந்த உத்தரவு மீண்டும் நீட்டித்திருப்பதாக கருதப்படுகிறது. இப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு அடிப்படையில் அதிமுக பொதுக்குழு மட்டுமே ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்ய முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.