கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தேதி வரல, ரெய்டு வந்துடுச்சு- ஆடிப் போன அரசியல் கட்சிகள்!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் இலவசங்களை வாரி வழங்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன.

தேர்தல் ஆணையம் தீவிரம்

மேலும் மதம் சார்ந்த அமைப்புகள், மடங்கள் உள்ளிட்டவற்றிற்கு நன்கொடை வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. சரக்கு வாகனங்களை ஆய்வு செய்ய மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைப்பது, பணப் பரிவர்த்தனைகளை ஆராய்வது என ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

முன்கூட்டியே களமிறங்கியது

வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தான் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் இம்முறை முன்கூட்டியே அதிரி புதிரி சம்பவங்களை பார்க்க முடிகிறது. கடந்த செவ்வாய் அன்று அனைத்து மாவட்ட துணை ஆணையர்களுக்கும் உத்தரவு ஒன்று பறந்தது. அதன்படி, சோதனை சாவடிகளில் 24/7 செயல்படும் வகையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வரை 50 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார், சுங்க வரித்துறை, வர்த்தக வரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றின் ஊழியர்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் சரக்கு வாகனங்கள், ஆள் நடமாட்டம், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கவனித்தால் உரிய ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் ஷாக்

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள கட்டிடம் ஒன்றில் சோதனையிட்ட போது ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்தோம். இவ்வாறு ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பது சட்டப்படி குற்றம். இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலால் வரித்துறை மூலம் மதுபான விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இலவசங்கள், கூப்பன்கள், பணப் பரிமாற்றம் ஆகியவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.

ரகசிய தகவல்கள்

மேலும் மாநில அளவிலான வங்கி குழுவினர் உடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உதவியுடன் பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள், குறிப்பாக அதிகப்படியான பணப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை தொடர்பான தகவல்களை பெற்று வருகிறோம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.