கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அருள்சாமி (38). இவருடைய மனைவி சாந்தி (35). இந்நிலையில் சம்பவத்தன்று சாந்தி தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாந்தியின் தாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சாந்தியின் கணவர் அருள்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாந்தி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.