எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில், ஈபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானத்திற்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காததால் அது செல்லும் என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளராக தாம் கையெழுத்திட தயார் என்றும், ஆனால் அதனை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வேட்பாளரை அறிவித்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
மனு மீதான இரு தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்யும் என்றும், வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரவிக்க வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
newstm.in