அப்டேட் கேட்டு அடம் பிடிக்காதீர்கள் : ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள்

சமீபகாலமாகவே தங்களது அபிமான ஹீரோக்கள் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதில் அவர்களது ரசிகர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். சொல்லப்போனால் ரொம்பவே தீவிரமாகவும் இருக்கிறார்கள். அப்படி தமிழில் கூட அஜித் பட அப்டேட் கேட்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களிலும், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்வுகளிலும் கூட ரசிகர்கள் பேனர்களை பிடித்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் தனது ரசிகர்களுக்கு, தான் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகளை அடிக்கடி கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தனது சகோதரர் கல்யாண் ராம் நடித்துள்ள அமிகோஸ் என்கிற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, “என்னுடைய படம் இந்த மாதத்தில் துவங்க இருக்கிறது. மார்ச் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 2024 ஏப்ரல் 5ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதே சமயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் படம் குறித்த அப்டேட்டுகளை கொடுப்பது என்பது முடியாத காரியம்.

எனது படங்களை பற்றிய உங்களது ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் உங்களது ஆர்வம் தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத ஒரு அழுத்தத்தை கொடுப்பதாக இருக்கிறது. என்னிடம் ஏதாவது அப்டேட்டுகள் இருந்தால் என் மனைவியிடம் சொல்வதற்கு முன்பாக அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் என்னுடைய படங்களை பற்றி மட்டும் இங்கே பேசவில்லை. இதேபோன்ற ஒரு அழுத்தத்தை திரையுலகில் உள்ள பல நடிகர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு தான் பேசுகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 30வது படமான இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.