அருப்புக்கோட்டை அருகே கோயில் திருவிழா பிரச்சினை: பெண்கள் உள்பட 100 பேர் கைது; 300+ போலீஸ் குவிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே கோயில் திருவிழா கொண்டாடுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவ நத்தம் கிராமத்தில் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட இக்கோயிலில் கிராம மக்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட சமுதாயத்தினரும் சேர்ந்து வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தலைமுறை தலைமுறையாக இக்கோயிலில் வழிபாடு நடத்தி வருவதால் தங்களுக்குதான் இந்தக் கோயில் பாத்தியப்பட்டது என குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் கருத்து தெரிவித்து வந்தனர். இது சம்பந்தமாக அக்குறிப்பிட்ட சமுதாயத்தினரால் பத்திரகாளி அம்மன் கோயிலுக்குள் கல்வெட்டு ஒன்றும் தங்களுக்கு பாத்தியப்பட்டது என அறிவிப்பு வைக்கப்பட்டது.

இதனால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், மகா சிவராத்திரி அன்று திருவிழா நடத்துவதற்காக பத்திரகாளி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது என்பதால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் திருவிழா நடத்த ராமநாதபுரம் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் இரு தரப்பினரையும் அழைத்து அருப்புக்கோட்டையில் நேற்று மாலை கோட்டாட்சியர் கல்யாண் குமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பாலவ நத்தம் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், பாலவ நத்தம் கிராமத்தில் இன்று காலை மீண்டும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் குவிக்கப்பட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அக்குறிப்பிட்ட சமுதாயத்தினரை போலீசார் விரட்டி பிடித்து குண்டுகட்டாக தூக்கி வந்து வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால், பாலவ நத்தம் கிராமத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.