ஓசூரில் கால்நடை பண்ணை அருகே முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகள் வனத்துக்குள் விரட்டியடிப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கால்நடை பண்ணை அருகே முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகள் விரட்டியடிக்கப்பட்டன. ஓசூர் மத்திகிரி பகுதியில் அரசு கால்நடை பண்ணை உள்ளது. இங்குள்ள மூங்கில் காட்டில் ஒற்றை யானை திரிவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியபோது அங்கு 5 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்நிலையில் காலையில் அவற்றை ஓசூர் தளிச்சாலை வழியாக யானைக்கால் பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். மேலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் மத்திகிரி, குருபட்டி, கூனப்பள்ளி, அந்திவாடி உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலை பாதையில் யானைகள் முகாமிட்டிருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதுகாப்பாக செல்ல வனத்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாத வாகன ஓட்டிகள் சிலர், யானைகளை இடையூறு செய்யும் வகையில் அதன் அருகே சென்று புகைப்படம் எடுப்பதுடன் வாகனத்தை முன்னும், பின்னும் இயக்கி தொந்தரவு செய்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.