`பல்கலைக்கழகத்துக்கு சுற்றறிக்கைவிடும் அதிகாரத்தை கவர்னருக்கு யார் கொடுத்தது?’ என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு கவர்னர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், “குஜராத்தைச் சேர்ந்த வேதிக் மிஷன் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பால், `சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் வருகிற 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, 9 நாள்கள் நடத்தப்படவிருக்கிறது.
இந்தப் பயிற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு, சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கும்போது, கவர்னர் போட்டி அரசை நடத்துகிறாரா… அந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? நாட்டில் நடப்பது கவர்னர் அரசா… இதன் நோக்கங்கள் என்ன என்பதை கவர்னர் அறிவிப்பாரா?
வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் வேலையில் கவர்னர் ஈடுபடுவாரேயானால் மிகப்பெரிய மாணவர் கிளர்ச்சிக்கும், மக்கள் கிளர்சிக்கும் வித்திடும். தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை இதில் அவசர அவசரமாக தலையிட்டு, கவர்னரின் சுற்றறிக்கையை செயல்படுத்தக்கூடாது என்று அறிவிக்க வேண்டும். உடனடியாக சுற்றறிக்கை வெளியிட்டு தடுப்பது அவசரமும், அவசியமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.