அட்டாக் அதானி… அலறவிடும் ஆளுநர்… திருக்குறளால் கொட்டு வைத்த கனிமொழி!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய தூத்துக்குடி மக்களவை தொகுதி
திமுக
எம்.பி கனிமொழி, மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே கட்சி என்ற முறையை அமல்படுத்த பார்க்கிறது.

சமூக நீதி மாடல்

ஆனால் இது ஒருபோதும் நடக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாநில மக்களையும் நீங்கள் குறைத்து மதிப்பிட்டு வருகிறீர்கள். மாநில நலன்கள், இலவசங்கள் என்றால் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை. ஆனால் நாங்கள் முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக நீதி, ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றின் மாடலாக இருக்கிறோம்.

பேராசிரியர் அன்பழகன் உரை

1967ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பியும், பேராசிரியருமான அன்பழகன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டார். அதை இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் நிலுவையில் வைத்திருப்பது குற்றம்.

ஆளுநர்கள் அட்ராசிட்டி

இதேபோல் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். கூட்டாட்சி தத்துவம் என்னவென்பதை அம்பேதகர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் ஒருமுறை படித்து பாருங்கள் என்றார். மேலும் பேசுகையில், நடப்பாண்டு குடியரசு தலைவர் உரையில் திருக்குறளை தவிர்த்து விட்டீர்கள்.

திருக்குறள் முன்னுதாரணம்

ஏனெனில் தமிழ்நாட்டில் எந்தவித தேர்தலும் இல்லை என்ற காரணத்தால் தான்.
”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்”
என திருவள்ளூவர் கூறியுள்ளார். அதற்கு தீமைகளை எடுத்துரைக்கும் பெரியவர்களை துணையாக கொள்ளாத அரசு, கெடுப்பவர்கள் இல்லாமல் தானாகவே கெடும் என்று அர்த்தம்.

அதானி விவகாரம்

ஏனெனில் நீங்கள் எதிர்க்கட்சிகள், மக்கள், பத்திரிகைகள் பேசுவதை செவி கொடுத்து கேட்க மறுக்கிறீர்கள். மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்கள் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அவற்றை ஆராய்ந்து படித்து பார்க்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நீங்களாகவே மசோதாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

அதானி கார்ப்பரேட் மோசடி குறித்து செய்திகள் வெளியானதும் நீங்கள் எவ்வளவு வேகமாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள், பாதுகாக்கிறீர்கள், உடன் நிற்கிறீர்கள் என்பதை பார்க்க முடிகிறது. இதை பற்றி பேசினால் தேசத்திற்கு எதிரானது என எங்களை முடக்க பார்ப்பதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.