சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 56.94 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த வாலிபர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 56.94 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 110 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.