பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் ..!

டெல்லி: பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

மேலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளையும் வழங்கி உள்ளன. மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இதனிடையே டெல்லியில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே; அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற குழு முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் தலைமை நீதிபதியின் கண்காணிப்புக்குக் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஆனால் ஒன்றிய அரசு இதை ஏற்க மறுக்கிறது. ஏன் இந்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிடாமல் இருக்க காரணம் என்ன? இதன் மீது விவாதம் நடத்தாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் ஒன்றிய அரசு ஓடுகிறது. அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் எதிர்கட்சிகள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பொய் சொல்கிறார்கள். பா.ஜ.கவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள். பொய் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள்’ என விமர்சித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.