பழைய ஓய்வூதியத் திட்டம் 2023: மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நாட்டின் அனைத்து மாநில மற்றும் மத்திய ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்களும் சில அமைப்புகளும் கோரி வருகின்றனர். வரும் நாட்களில் நாட்டின் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும், 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலும் நடக்க உள்ளன. இந்த நிலையில் ஊழியர்களை மகிழ்விக்க அரசு மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த நிலையான தகவல் எதுவும் அரசு தரப்பிலிருந்து இன்னும் வரவில்லை.
இதற்கிடையில், இனி பல அரசியல் கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக்கி, தாங்கள் ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து வருகின்றன. இதனால் உஷாரான மத்திய அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய திட்டங்களைத் தயார் செய்து வருகிறது.
பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்த ஆலோசனைகள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பல வித ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்காக ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் அரசும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளும் 3 வகையான தீர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முதல் தீர்வு:
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி சம்பளம் ஓய்வூதியமாகப் பெறப்படும். ஆனால் இதற்கு ஊழியர்கள் பங்களிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது.
இரண்டாவது தீர்வு:
இரண்டாவது தீர்வு என்னவென்றால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதில் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது, ஆனால், அதற்கு நிகரான ரிட்டர்ண் இல்லை என ஊழியர்கள் புகார் கூறுகிறார்கள். NPSல் இருக்கும் ஊழியர்களின் குறையை நீக்கும் வகையில், குறைந்தபட்ச வருமானம் 4 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று அறிகுறிகள் தென்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, என்பிஎஸ்-ல் முதிர்வு நேரத்தில் ஊழியர்களுக்கு 60 சதவீதம் தொகை வழங்கப்படுகிறது. இதையும் ஓய்வூதியத்தில் சேர்த்தால், ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்கலாம்.
மூன்றாவது தீர்வு:
அடல் ஓய்வூதியத் திட்டத்தைப் போல, (அடல் பென்ஷன் யோஜனா) குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பது மூன்றாவது தீர்வாக உள்ளது. தற்போது இதில் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் உள்ளது. அடல் பென்ஷன் யோஜனாவை PFRDA கவனித்து வருகிறது. ரூ.5000 என்ற வரம்பை ரத்து செய்ய முடியும் என்று PFRDA கூறுகிறது. ஆனால் இதற்கு நிதி பற்றாக்குறை சூழ்நிலையை சமாளிக்க உதவும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
இந்த மூன்று தீர்வுகளும் பிஎஃப்ஆர்டிஏ மூலம் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதில் என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதில் இன்னும் சந்தேகம் உள்ளது. பிஎஃப்ஆர்டிஏவில் புதிய தலைவர் நியமனத்திற்காக காத்திருப்பது இதற்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது.