துருக்கி நிலநடுக்கம் பற்றியும் அந்த நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் கவிஞர் வைரமுத்து உருக்கமாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.8 ரிட்டர் அளவாக பதிவாகியது. இது 18 கிலோமீட்டர் ஆழத்திற்கு உணரப்பட்ட நிலநடுக்கம் ஆகும்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 7.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை மீண்டும் நான்காவது முறையாக 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின் மீண்டும் ஐந்தாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட அடுத்தடுத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
ஒரே நாளில் நேற்று 2300 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால், இதுவரை பலி எண்ணிக்கையின் விவரங்கள் முழு அளவாக தெரியவில்லை. 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இது பற்றி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும். கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்.” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.