தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். அறுபடை வீடுகொண்ட இவரின் ஐந்தாம் படை வீடு திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் வள்ளியைத் திருமணம் செய்துகொண்ட இந்த தளத்திற்கு தணிகை தளம் என்றும் பெயருண்டு. இந்த முருகன் கோயில் மலை பகுதியில் அமைந்துள்ளதால், கோவிலை சுற்றிலும் காடுகள் நிறைந்தவண்ணம் உள்ளது.
அதனால், கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கோவில் மூலஸ்தானத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனால், பக்தர்கள் அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து, கோயில் பணியாளர்கள் குரங்குகளை கம்புகளை கொண்டு, அச்சுறுத்தி விரட்டினர். மேலும், குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பதால், அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.