என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை ‛எமெர்ஜென்சி' என்ற பெயரில் தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறார் கங்கனா ரணவத். அது முதல் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னை யாரோ வேவு பார்க்கிறார்கள் என்றும், எனது தனிப்பட்ட வரவு செலவுகள், தகவல் பரிமாற்றங்கள் கசிந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டி வந்தார் கங்கனா. குறிப்பாக சமீபத்தில் குழந்தை பெற்ற நட்சத்திர தம்பதிகள் இதை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அவரை பின் தொடர்கிறவர்கள் யார் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்டு வந்தனர். இதற்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். என்னைச் சுற்றி எந்த சந்தேகத்திற்கிடமான செயல்களும் நடைபெறவில்லை. கேமராக்களுடனும், அவை இல்லாமலும் என்னை யாரும் பின்தொடரவில்லை. இருப்பினும், இந்த சதிச்செயலுக்குப் பின்னால் செயல்படுபவர்களுக்கும், என்னை முட்டாளாக நினைப்பவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்களை அடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது சொத்துக்கள் முழுவதையும் அடமானம் வைத்து எமெர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறார் கங்கனா. அப்படிப்பட்ட சூழலில் இதுமாதிரியான விஷயங்கள் அவரை மிகுந்த காயமடைய வைத்திருப்பதால் கோபத்தின் வெளிப்பாடாக இப்படி ஒரு பதிவை பதிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.