கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023: இந்த வாட்டி JDS கிங் மேக்கரா? இல்ல ஜோக்கரா?

கர்நாடக மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் – மே 2023 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது. தனிப் பெரும்பான்மையை பொறுத்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அமையவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசியல் கிங் மேக்கராக இருந்த வரலாறுகள் உள்ளன.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பலம்

தொங்கு சட்டமன்றம் அமையும் போது யாராவது ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும். குறிப்பாக ஒக்கலிகா வாக்கு வங்கி, ஓல்டு மைசூரு மண்டல செல்வாக்கு ஆகியவற்றால் கர்நாடக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் விளங்கி வருகிறது. இதன்மூலம் 2004ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் உச்சம் தொட்டது.

செல்வாக்கு சரிவு

அப்போது 58 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றது. முதலில் காங்கிரஸ் அதன்பிறகு பாஜக என மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் இக்கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கடைசியாக நடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் 18 சதவீதமாக வாக்கு வங்கி குறைந்தது.

ஓல்டு மைசூரு

அதேசமயம் ஓல்டு மைசூரு மண்டலத்தில் உள்ள 30 இடங்களை கைப்பற்றியது. கிட்டதட்ட 10 மாவட்டங்களில் தனது இருப்பை உறுதி செய்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கைகோர்த்து குமாரசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும் பாஜக நடத்திய ஆபரேஷனால் 14 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

பாஜக வியூகம்

ஏனெனில் இதுவரை கால் பதிக்காத இடங்களில் பாஜக செல்வாக்கை உயர்த்தும் வேலைகளில் ஈடுபட்டது. கடந்த 4 ஆண்டுகள் இதற்கான வேலைகளை அக்கட்சி பெரிதாக செய்து வைத்துள்ளது. இதனால் 2023 சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே இருந்த செல்வாக்கை மதச்சார்பற்ற ஜனதா தளம் அடைய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குமாரசாமிக்கு சவால்கள்

கட்சிக்குள்ளும் பல்வேறு சவால்களை குமாரசாமி சந்தித்துள்ளார். செல்வாக்கு மிகுந்த மூத்த தலைவர்கள் பலரும் கட்சி தலைமையின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று கூறி வெளியேறி விட்டனர். தாத்தா முதல் பேரன் வரை குடும்ப அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் அக்கட்சியின் செல்வாக்கை சரிவடைய செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் குறைந்தது 25 தொகுதிகளில் வென்றால் கூட போதும். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கர் ஆகிவிடலாம் என்ற கணக்கை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். அதற்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு முறைகேடுகளில் சிக்கியதால் அதன் வெற்றி வாய்ப்பு குறையும் என்றும், கடந்த முறையை கட்டிலும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.