ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகளை கண்டதும், அவர்களை கண்டித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரித்ததில் உரிய அனுமதியின்றி அங்கு அதிமுக தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதே போல் கடந்த 31ம் தேதியும், எவ்வித அனுமதியும் இன்றி இதே மண்டபத்தில் அதிமுகவினர் கூடியதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று உரிய அனுமதி பெற்று தேர்தல் பணிமனை நடத்துமாறு அறிவுறுத்தினர். மேலும் அது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதியின்றி கூடியதை அடுத்து மண்டபத்துக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.