தமிழ்நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10, 000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக கடந்த ஒரே மாதத்தில் போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராத தொகை கட்ட வேண்டும் என்ற கடுமையான விதிமுறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், அபராத தொகை கட்டாதவர்களின் வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும், என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் அவர்கள் முறையாக கட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.