திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க தனிப்படை முடிவு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 12-ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடைபெற்றது. ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்த 6 கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த ரூ.73 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அவர்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவர் முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் ரூ.70 லட்சத்தின் நிலை குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேரின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பிடிக்க, ஹரியாணா மாநிலத்தில் தனிப் படையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், ஹரியாணா மாநிலத்தில், ராஜஸ்தான் கொள்ளையர்கள் 2 பேர் ஜீப்புடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்கும் தனிப்படையின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.