பழநியில் பறவை காவடி நேர்த்திக் கடனை செலுத்திய வால்பாறை பகுதி பக்தர்கள்

பழநி: பழநியில் அலகு குத்தியும், பறவைக் காவடியில் வந்தும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்நிலையில் தைப்பூச விழா முடிந்த பிறகும் கூட பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி மலைக் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று (பிப்.23) காலை கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 47-வது ஆண்டாக பழநிக்கு பாத யாத்திரையாக வந்தனர்.

அவர்களில் ஒன்பது பேர் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடியில் வந்தனர். பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வலம் வந்து கோயிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.