ஓபிஎஸ் தனிக்கட்சி; அதிமுகவில் இனிமே ’நோ’… மதுரையில் எடப்பாடி சரியான பஞ்ச்!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக
எடப்பாடி பழனிசாமி
தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சூழலில் மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதிமுக பொதுக்குழு செல்லும்

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற்றது செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். தர்மம், நீதி வென்றுள்ளது. அதிமுகவிற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பே சொல்லிவிட்டது. அத்தோடு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அதிமுகவிற்கும் இடையிலான தொடர்பும் முடிவுக்கு வந்தது.

பொதுச் செயலாளர் எப்போது?

எங்களுக்கும், அவருக்கும் இனி எந்தவித தொடர்பும் கிடையாது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. இனி எழுச்சியோடு அதிமுக செயல்படும். கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். கழகத்தின் சட்ட விதிகளை காக்க வேண்டும் என்று
ஓ.பன்னீர்செல்வம்
இரண்டாவது தர்ம யுத்தத்தை அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தனிக்கட்சி

இதுபற்றி கேள்வி எழுப்புகையில், நீங்கள் அவரை தான் கேட்க வேண்டும். மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்களை பற்றி பேச அவருக்கு தகுதியும் இல்லை. தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி அதிமுகவிற்காக பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள் தாராளமாக மீண்டும் வரலாம்.

அதிமுக பொற்கால ஆட்சி

ஒருசிலரை தவிர. மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்வோம். கடந்த முறை எனது தலைமையில் ஆட்சி அமைந்த போது விரைவில் களைந்து விடும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் நான்கு ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம். யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்து அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்ற அளவிற்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம்.

திமுகவிற்கு பயம்

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. அப்புறம் பேசிக் கொள்ளலாம். ஆளும் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் வாக்காளர்களை கொண்டு போய் அடைத்து வைக்கின்றனர். உங்களுக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் அடைத்து வைக்க வேண்டும்?

ஓபிஎஸ் கூடாரம் காலி

இதுவே எங்களுக்கு வெற்றி. அதிமுக வலுவாக தான் இருக்கிறது. நீங்கள் தான் கட்சி 3, 4ஆக பிளவுபட்டுள்ளதாக கூறுகிறீர்கள். நாங்கள் ஒரே அணியாக ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். அதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் இருந்து ஒவ்வொருவராக எங்கள் பக்கம் வந்துவிடுவர். தொண்டர்கள் எழுச்சியுடன் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை அளிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.