கம்போடியாவின் கிராமப்புற ப்ரே வெங் மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு எச்5என்1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு அதிக காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கம்போடியாவின் சுகாதார அமைச்சகம், அவரது தந்தையும் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று, சுகாதார அமைச்சர் மாம் புன்ஹெங், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கம்போடியாவில் எச்5என்1 விகாரத்தின் முதல் அறியப்பட்ட மனித தொற்று இது என்று கூறினார்.
சிறுமி தனது கிராமத்திலிருந்து தலைநகர் புனோம் பென்னில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறுது நேரத்தில் உயிரிழந்தார். சிறுமியின் கிராமத்திற்கு அருகில் இருந்து இறந்த பல பறவைகளின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகள் அருகில் செல்லவோ அல்லது தொடவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கம்போடியாவில் கடைசியாக 2014-ல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 2014-ம் ஆண்டில், எச்5என்1 நோய்த்தொற்றினால் 56 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 37 பேர் உயிரிழந்தனர். பறவைக் காய்ச்சல் மனிதர்களை தாக்குவது அரிதான ஒன்று. ஏனெனில் மனிதர்களின் தொண்டை, மூக்கு மற்றும் மேல் சுவாசக் குழாய்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் சூழல் மிகவும் குறைவு. நோய்வாய்ப்பட்ட கோழிகள் அல்லது பறவைகள் இடையே வேலை செய்பவர்கள் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.