வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை 2ம் கட்ட யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட் என்ற இடத்திலிருந்து குஜராத் மாநிலம் போர்பந்தர் வரை பாதையாத்திரை செல்ல உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி துவங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தெற்கில் கன்னியாகுமரியில் இருந்து வடக்கு காஷ்மீர் வரை ராகுல் மேற்கொண்ட யாத்திரை மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய வளர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது.
மற்றொரு யாத்திரை:
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபெற்ற, யாத்திரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை மற்றொரு பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த யாத்திரை முழுக்க முழுக்க நடைப்பயணமாக இருக்காது. ஏனெனில் இந்த யாத்திரையின் பல இடங்களில் காடுகளும், ஆறுகளும் உள்ளன. எனவே இந்த யாத்திரை பல்வேறு முறைகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் பெரும் பகுதியில் யாத்திரையாக தான் இருக்கும்.
திட்டம்:
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் துவங்கியதும் மழைக்காலம் ஆரம்பமாகிவிடும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாத யாத்திரைக்கான திட்டம் வகுக்கப்படும். இந்த யாத்திரை ஜூன் மாதத்திற்குள் துவங்கும் அல்லது நவம்பருக்கு முன் துவங்கலாம். இது குறித்த முழு விவரம் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்:
சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி- காஷ்மீர் வரை யாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள், காங்., எம்.பி ராகுல் உடன் இணைந்து மகிழ்ச்சியாக யாத்திரை மேற்கொண்டனர். இந்நிலையில் கட்சியில் இருந்து, 2ம் கட்ட யாத்திரை செல்ல
திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததும், காங்., தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement