மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே வெற்றி விநாயகர் ஆலய வளாகம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குபேரபுரீஸ்வரர் கோயில்கொண்டருள்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் சிவபார்வதி திருமண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன் தினம் இரவு உமா மகேஸ்வரர் – சிவ பார்வதி திருக்கல்யாண விழா விமர்சியாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர், குபேரபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்தை ஒட்டிசிறப்பு யாகங்களும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மணமக்கள் விட்டார் சார்பில் மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து உமா மகேஸ்வரர் – சிவபார்வதி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.
தெய்வத்திருமணங்களை தரிசனம் செய்தால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். இல்வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. எனவே இதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடிவந்திருந்து திருக்கல்யாணக் காட்சியைக் கண்டு பரவசமடைந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் வெங்கடேசதீட்சிதர் தலைமையிலான தீட்சிதர் குழுவினர் கலந்துகொண்டு திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். விழாவில் ஆலய அறங்காவலர் சம்பந்தம், ஒன்றிய குழு துணை தலைவர் பானு சேகர்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுமதிராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நற்குணன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்திராஜேந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.