கஸ்டடியில் இருந்து நாகசைதன்யாவை ரிலீஸ் செய்த வெங்கட் பிரபு

தமிழின் முன்னணி நடிகர்கள் சிலர் தெலுங்கு பட இயக்குனர்களின் டைரக்ஷனில் நடிக்க விரும்புவது போல, இயக்குனர் வெங்கட் பிரபுவும் தெலுங்கில் இறங்கி அங்கேயும் தனது கொடியை நாட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இளம் நடிகர் நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்கு இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்தப்படத்தின் பாடல்காட்சி ஒன்று பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினருடன் இணைந்து வெங்கட் பிரபு எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு படம் நிறைவடைந்துள்ளது அறிவித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு, நாகசைதன்யாவை அழைத்து இன்று முதல் கஸ்டடியில் இருந்து நீங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறீர்கள் என்று கூறுகிறார். அதை தொடர்ந்து வீடியோவின் இறுதியில் நாகசைதன்யா மற்றும் நாயகி கீர்த்தி ஷெட்டி இருவரும் உங்கள் அனைவரையும் மே 12ம் தேதி முதல் கஸ்டடியில் எடுக்க இருக்கிறோம்.. தியேட்டரில் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.