சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்திற்குள் நேற்று ஏட்டுக்கள் சுகவனம், லோகநாதன் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஹான்ஸ் அல்லது கஞ்சா பொட்டலம் இருக்குமோ? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது ஒரு பண்டல் இருந்தது.
சந்தேகமடைந்த போலீசார் அந்த முதியவரை பையுடன் அழைத்துக்கொண்டு பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தனர். அந்த பண்டலை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக ₹500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் ₹62 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர், ஈரோடு பெருந்துறை மெயின்ரோடு குமலன்குட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (59) என்பது தெரியவந்தது.
அவரிடம் உதவி கமிஷனர் சரவணகுமரன், இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து, சேலம் வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜாராம், ஆய்வாளர் தங்கபாலன் ஆகியோரிடம் ₹62 லட்சத்துடன் பாலகிருஷ்ணனை ஒப்படைத்தனர். அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.