திப்ருகர்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர்வழி சொகுசு கப்பல் தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் திப்ருகர் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ், கடந்த ஜனவரி 13ம் தேதி வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய தயாரிப்பான இந்தக் கப்பல், பாட்னா சாஹிப், புத்த கயா, விக்ரம்சிலா, டாக்கா (வங்கதேசம்), சுதர்பன், காசிரங்கா தேசிய பூங்காக்கள் வழியாக நாளை மறுநாள் (பிப். 28) அசாம் மாநிலம் திப்ருகரை சென்றடைகிறது.
கிட்டத்தட்ட 50 நாட்களில் 3,200 கி.மீ தூரத்தை கடக்க இருக்கிறது. திப்ருகருடன் இந்த கப்பல் பயணம் நிறைவு பெறுகிறது. தனித்துவமான வடிவமைப்புடன் கட்டமைக்கப்பட்ட இந்த மூன்றடுக்கு சொகுசு கப்பலில், 18 அறைகள் உள்ளன. இந்த கப்பலில் முன்பதிவு செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் என்பதால், ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நாளை மறுநாளுடன் கப்பலின் நீண்ட தூர பயணம் நிறைவு பெறுவதால், இந்த கப்பலை திப்ருகரில் வரவேற்க ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சரகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.