சிவகாசி அருகே கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கண்மாயில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் யோசேப்(17). இவர், அச்சக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பரான கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்திக்(16), திருத்தங்கலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.

யோசேப்புக்கு இன்று (பிப்.26) பிறந்தநாள் என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அதன்பின் கார்த்திக், யோசோப் மற்றும் இரு நண்பர்கள் சேர்ந்து செங்கமல நாச்சியார்புரம் சாலையில் உள்ள பெரியகண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த யோசேப், கார்த்திக் ஆகியோர் நீரில் மூழ்கி உள்ளனர். தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படையினர் யோசேப், கார்த்திக் ஆகியோரின் உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் திருத்தங்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.