பொம்மை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர்கள் 3 பேரை கோவையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, துடியலூர் பகுதியில் துணை நடிகர்கள் மூன்று பேர் பொம்மை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த மாங்கரை பகுதியை சேர்ந்த சமீர், கிஷோர், திருநல்லை கொல்லம் பகுதியை சேர்ந்த திலீப் ஆகிய மூன்று பேரும் ஒரு சில சின்னத்திரை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் மூன்று பேரும் பாலகாட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக கோவைக்கு காரில் வந்துள்ளனர். கவுண்டம்பாளையம் பகுதியில் மது அருந்திய மூன்று பேரும், புதுக்கோட்டை மாவட்டம், திருவனவாசல் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் அன்பு என்பவரிடம் தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, துணை நடிகர்கள் மூன்று பேரும் தாங்கள் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை காட்டி சுட்டு கொலை செய்து விடுவேன் என்று அன்புவை மிரட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அன்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துடியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், துணை நடிகர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த பொம்மை துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று பேரையும் சிறைகள் அடைத்தனர்.