ராஞ்சி: ஜார்கண்டில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மம்தா தேவி என்பவர் 2016ம் ஆண்டு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மம்தா தேவியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டு ராம்ஹர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராம்ஹர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மம்தா தேவியின் கணவர் பஜ்ரங் மொடோ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராம்ஹர் மாவட்டம் ராம்ஹர் தொகுதியில் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதே மாவட்டத்தின் பட்ரது நகர காங்கிரஸ் நிர்வாகி ராஜ்கிஷோர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார். சைவா பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்த ராஜ்கிஷோரை அங்கு வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட ராஜ்கிஷோர் ராம்ஹர் மாவட்டத்தின் பர்கஹான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அம்ப பிரசாதின் நெருக்கிய நபராவார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காங்கிரஸ் தலைவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.