‛இன் கார்' பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை: ரித்திகா சிங் பேட்டி

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‛இன் கார்'. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அப்பெண்ணின் பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் மார்ச் 3ம் தேதி வெளியிட உள்ளனர். படம் பற்றி இயக்குனர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ‛இன் கார்' படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர்.

இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்னைகளைத் தரும், இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே “இன் கார்”. இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம்' என்றார்.

நடிகை ரித்திகா சிங் கூறுகையில், ‛இன் கார்' படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறாள் என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.