புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று கவிநாடு கண்மாய் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.
இந்த போட்டியில், 900 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்ட காளைகள் அருகிலுள்ள கண்மாயில் விழுந்து செல்லும் அபாயம் ஏற்பட்டது.
இருப்பினும், கண்மாயில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் காளைகள் கலெக்ஷன் பாயிண்டிற்கு சென்று விட்டு பயந்து ஓடி கண்மாய்க்குள் விழுந்து திக்கு தெரியாமல் நீந்தி சென்றன. உரிமையாளர்கள் காளையை மீட்பதற்கு பெரும் பாடு ஏற்பட்டது.
இந்த போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமல்லாது காளைகளின் உரிமையாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த நிலையில், கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது ஜல்லிக்கட்டு காளை ஒன்று கண்மாய் தண்ணீருக்குள் விழுந்து நீந்தி சென்றது.
அதன் பின்னர், காளை வெளியே கரைக்கு வராமல் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கண்மாயில் தவித்த நிலையில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.