சென்னை: அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சிக்கு அழைப்பு விடுத்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினர். இந்த கண்காட்சியானது வரும் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது.
சந்தைப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின், சிறுவயது முதலான அறிய புகைப்படங்கள் இடம்பெறும். புகைப்பட கண்காட்சியை, திறந்து வைப்பதற்கு கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு பெருத்த மகிழ்ச்சியாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.