பெரம்பூர்: புளியந்தோப்பில் போலீசார் சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இளைஞர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்றுமுன் தினம் புளியந்தோப்பு காவல் சரகம் சார்பில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதை பொருட்களுக்கு எதிராக சைக்கிள் பேரணியை நடத்தினர்.
புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து நியூ பேரன்ட்ஸ் ரோடு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, காந்திநகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதி வழியாக பேசன் பிரிட்ஜ் காவல் நிலையம் வரை இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசன் பிரிட்ஜ் ஆகிய 3 காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், அப்பகுதியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்களின் பயன்பாடுகளை கண்டறிவது குறித்தும் இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த சைக்கிள் பேரணியில் பேசன் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.