சென்னை : ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தாயாரும் மரணமடைந்த சோகம்!
கடந்த அக்டோபர் மாதம், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த சத்யா என்ற 20 வயது மாணவியை, ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்ததாக கூறப்பட்டது. அந்த சூழ்நிலையில், இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுதும், ஆத்திரமடைந்த சதிஷ் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்தியாவை தள்ளி கொலை செய்தார்.
தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் விஷம் குடித்து அன்றே தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், கணவன், மகளை பறிகொடுத்து புற்றுநோயுடன் போராடிக்க கொண்டிருந்த மாணவியின் தாய் ராமலெட்சுமியும் இன்று காலமானார். ஒரு குடும்பமே மொத்தமாக பலியானது அப்பகுதியினரிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.