கோவை: கோவை பொள்ளாச்சி சண்முகாபுரத்தில் பால் கொள்முதல் குறைந்துள்ளதால் ஆவினுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரி அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கோவை ஆவினுக்கு பொள்ளாச்சி சண்முகாபுரம், சுல்தான்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பால் குளிர்விப்பான் நிலையத்தில் இருந்தும், பல்வேறு இடங்களில் செயல்படும் 5 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யும் அளவு கொண்ட பிஎம்சிகளில் இருந்தும் தினமும் 1.70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, தற்போது தினமும் 1.15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் நடந்து வருகிறது. இதனால், கோவை ஆவினுக்கு பால் கொள்முதல் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பால் கொள்முதல் தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பால் கொள்முதல் மற்றும் உற்பத்தியை அதிகாரிக்க ஆவின் நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்
ளார். இந்நிலையில், பால் கொள்முதல் குறைவு உள்ளிட்ட காரணங்களினால் பொள்ளாச்சி சண்முகாபுரம் பால் குளிர்விப்பான் நிலையத்தில் பணியாற்றி வந்த குறியீடு விரிவாக்க அலுவலர் செல்வராஜை தஞ்சாவூருக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்ற நடவடிக்கை ஆவின் அதிகாரிகள், ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* மதுரை ஆவினில் அமைச்சர் திடீர் ஆய்வு
மதுரை ஆவினில் கடந்த சில தினங்களாக பால் பாக்கெட் சரியான நேரத்தில் நுகர்வோர்களுக்கு சென்று சேரவில்லை. தேவைக்கேற்ப பால் உற்பத்திக்கான நடவடிக்கையை நிர்வாகம் எடுக்கவில்லை. பால் உற்பத்தி மையத்தில் தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் திடீரென்று மதுரை ஆவினுக்கு நேற்று வந்தார். பால் பாக்கெட் தயாரிக்கப்படும் இடங்களையும், சுத்திகரிப்பு உள்ளிட்ட ஆவினில் உள்ள உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் ஆவின் பொதுமேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.