திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கல்லூரி மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை கேட்டு மாதர்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோதையுரும்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா ஜோதி இவர் காமாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கல்லூரி மாடியிலிருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலன் தராமல் கடந்த 26ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு மருத்துவமனை எதிரே இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் உறவினர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.