அஸ்ஸாம் மாநிலம், கம்ருப் மாவட்டத்தில் உள்ள கங்சாரி என்ற இடத்தில் கடந்த 15-ம் தேதி நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டிக் பேக் ஒன்று சந்தேகத்துக்கு இடமான முறையில் கிடந்தது. இது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவலில் அடிப்படையில் போலீஸார் அங்குச் சென்று அந்த பிளாஸ்டிக் பேக்கை சோதித்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. போலீஸார் உடலை மீட்டு அவர் யார் என்பது குறித்தும், யார் அவரை கொலைசெய்தது என்பது குறித்தும் விசாரித்து வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் கமலா (35) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்றும், டெல்லியில் இருந்து காதலனை சந்திப்பதற்காக கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று கவுகாத்திக்கு வந்திருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணுக்கு ராணுவ அதிகாரி அம்ரிந்தர் சிங் வாலியா என்பவருடன் நீண்ட நாள்களாக திருமணம் மீறிய உறவில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அஸ்ஸாம் போலீஸார் ராணுவத்தினருடன் இணைந்து அம்ரிந்தர் சிங்கை கைதுசெய்தனர். அம்ரிந்தர் சிங்கிடம் விசாரித்ததில் கமலாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். பிப்ரவரி 14-ம் தேதி கொலைசெய்து இரவோடு இரவாக உடலை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து சாலையோரம் போட்டுச்சென்றது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஹிதேஷ் சந்திரா , “கொலைசெய்யப்பட்ட பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் முகாமில் ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் அம்ரிந்தர் சிங் இந்தக் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் என்ன காரணத்திற்காக அந்தப் பெண்ணை கொலைசெய்தார் என்று அவரிடம் விசாரித்து வருகிறோம். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் 4 வயது மகள் கவுகாத்தியில் மீட்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
கொலைசெய்யப்பட்ட பெண் முதலில் வாரணாசி சென்றிருக்கிறார். அங்கிருந்து கவுகாத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கொலைசெய்த அம்ரிந்தர் சிங்கிற்கு சொந்த ஊர் பஞ்சாப் ஆகும். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது.