சென்னையில் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களின் அமைப்பான ஐ.எஃப்.ஏ கேலக்ஸி (IFA Galaxy) சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த அமைப்பின் பிரசிடெண்ட் மோஷின் புஜேபுரி வரவேற்றார்.
முதல் நாள் கருத்தரங்கில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி (ஈக்விட்டி) ரவி கோபாலகிருஷ்ணன் முதலில் சிறப்புரையாற்றினார். அப்போது, ‘’ஒருவர் சரியான முறையில் முதலீட்டுத் தொகையை பிரித்து முதலீடு செய்தால் நிச்சயம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற முடியும்.”’ என்றார்.
அடுத்து பேசிய ஹெச்.டி.எஃப்.சி மியூச்சிவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்னீத் முனோத், “இந்தியர்கள் இன்னும் ரியல் எஸ்டேட்டில் சுமார் 50 சதவிகித அளவுக்கு பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் சுமார் 4.5 சதவிகித தொகையைதான் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை பெற முடியும்.” என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் தங்கள் வணிகத்தை பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் குரூப் பிரசிடெண்ட் மற்றும் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா, ஒயிட்ஓக் கேப்பிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஆஷிஷ் பி சோமையா, ஐடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ராஜேஷ் பாட்டியா, மோதிலால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சீனியர் குரூப் துணைத் தலைவர் ரித்தேஷ் பதக், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ராகவ் ஐயங்கார் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில் முதலில் ஐசிஐசிஐ ப்ரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சங்கரன் நரேன், “முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் நல்ல வருமானம் பெற முடியும். எந்த சொத்துப் பிரிவு எப்போது நல்ல வருமானம் தரும் என்பதை யாராலும் 100 சதவிகிதம் சரியாக கணிக்க முடியாது. எனவேதான், பணத்தை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் போடச் சொல்கிறோம். அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்ட்களில் இடைவிடாமல் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தால் செல்வம் சேர்க்க முடியும்.’’ என்றார்.
நிதி ஆலோசகர் எஸ்.சரவணன், பாண்ட் முதலீடு மூலம் லாபம் ஈட்டுவது பற்றி விரிவாக பேசினார். நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணை முதன்மை வணிக அதிகாரி சௌகட்டா சாட்டர்ஜி-ம் முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதன் நன்மை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.
பங்குச் சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சிவ் பாசின் விளக்கினார்.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி சேர்மன் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.பாலசுப்பிரமணியன், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கு ஆம்ஃபி மற்றும் செபி எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் மண்டல தலைவர் பி வெங்கடேஷ், ‘’மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. நம் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் சிறப்பாக செயல்பட்டால் முதல் இடத்துக்கு வந்துவிட முடியும்.” என்றார்.
ஐ.எஃப்.ஏ கேலக்ஸி அமைப்பின் செயலாளர் அபூர்வா பட் நன்றி கூறினார். இந்த இரு நாள் கருத்தரங்கில் தமிழகம் முழுக்க இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரர்கள் கலந்து கொண்டனர்.