தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கோட்ரதாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (22). இவரின் நண்பர் ஹரி கிருஷ்ணன் (22). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த போது, நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றனர். அப்போது இருவரும் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கினனர். இந்த நிலையில், நவீன் தன் காதலை முதலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.அதனை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால், சில நாள்களுக்குப் பிறகு, அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதேப் பெண்ணை ஹரி கிருஷ்ணன் காதலித்து வந்திருக்கிறார். இதற்கிடையே, மீண்டும் நவீன் தன் முன்னாள் காதலியுடன், தொடர்பில் இருந்திருக்கிறார். அடிக்கடி அந்தப் பெண்ணுக்கு மெசேஜ், போன் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஹரி கிருஷ்ணன், நவீனை கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்காக நவீனை தொலைபேசியில் அழைத்து `பார்ட்டிக்கு செல்லலாம்’ என அழைத்திருக்கிறார். அதை நம்பி சென்ற நவீனை யாருமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று, கத்தியால் குத்தியிருக்கிறார். படுகாயமடைந்த நவீன் சரிந்து விழுந்ததும், அவரின் தலையை தனியே துண்டித்து எடுத்து கொலைசெய்திருக்கிறார். மேலும், ஆத்திரம் அடங்காமல், தன் காதலியை தொட்ட விரல்களை வெட்டி வீசியும், நவீன் வயிற்றைக் கிழித்து இதயத்தை வெளியே எடுத்தும், அவரது உதடுகள், அந்தரங்க உறுப்பையும் வெட்டியும் கொடூரம் நிகழ்த்தியிருக்கிறார்.
அதை படமாக எடுத்து தன் காதலிக்கு அனுப்பிவிட்டு, உடலை புதரில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். 3 நாள்களாகியும் நவீன் வீட்டுக்கு வராததால் அவரின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நவீனின் செல்போன் அழைப்புகளை சோதித்த காவல்துறைக்கு, இறுதியாக ஹரி கிருஷ்ணன் பேசியது தெரியவந்திருக்கிறது. காவல்துறை அவரை விசாரித்ததில்,தன் காதலிக்கு மெசேஜ், போன் செய்த நண்பனை கொடூரமாக கொலைசெய்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
அவர் குறிப்பிட்ட இடத்திலிருந்து நவீனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதை உஸ்மானிய மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஹரி கிருஷ்ணனையும், அவரின் காதலியையும் காவல்துறை விசாரித்து வருகிறது. தன் காதலிக்கு மெசேஜ் செய்த நண்பனை கொடூரமாக கொலைசெய்த விவகாரம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.