சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், அதனை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோவில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி உள்ளனர்.
காரணம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறைத் தினங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக பெட்டிகளை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொதுப்பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றுடன் மேலும் இரண்டு பெட்டிகளை இணைக்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள பயணிகள், விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு அதிக அளவிலான பெட்டிகளைப் பயன்படுத்தும் வகையில், மெட்ரோ நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் 6 பெட்டிகள் வரை பயன்படுத்த முடியும் என்று மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரிகள் கூறுகின்றன.