பிரதமர் மோடியை டெல்லியில் நாளை சந்திக்க உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சந்திக்க உள்ளார். நாளை மாலை 4-5 மணி அளவில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரான பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.விளையாட்டு மேம்பாடுதுறை, சிறப்பு திட்ட சொல்லகத்துறை சார்ந்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அமைச்சர் உதயநிதி வழங்க உள்ளார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (27.02.2023) டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, இன்று மாலை 3.00 மணியளவில் டெல்லி தமிழ்ச்சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுடன் (All India Service Officials TN Cadre) கலந்துரையாடுகிறார். பின்னர், இரவு 7.00 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.