திருச்சி அருகே போர்வெல் பணியின்போது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

லால்குடி : திருச்சி அருகே போர்வெல் பணியின்போது ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் அக்ரஹாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளார். அப்பொழுது முன்னதாக 3 அடி ஆழம் வரை குழிதோண்டும் போது சிலையின் தலை தென்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து தோண்டும் போது பழங்காலத்து ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்துள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அம்மன் சிலையை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஐம்பொன் சிலையை கைப்பற்றி லால்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஐம்பொன் அம்மன் சிலை குறித்து நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்த சிலை என தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு தெரிய வரும் என லால்குடி தாசில்தார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.