சட்டப்பேரவை தேர்தலில் ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றும் மக்கள்!: மேகாலயாவில் 44.73%, நாகாலாந்தில் 57.06% வாக்குகள் பதிவு..!!

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 44.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 57.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரிபுராவில் கடந்த 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. எஞ்சிய மேகாலயா, நாகாலாந்து சட்டமன்றங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவில் சோக்கியாங் தொகுதி, ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மறைவை அடுத்து ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தின் அகுளுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கசோடோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் இரு மாநிலங்களிலும் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் வாக்காளர்கள் அதிகாலையில் இருந்தே வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

நாகாலாந்திலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2029 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் மேற்குவங்கம் சாகர்திகி தொகுதியில் 48.28 சதவீதம், ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் தொகுதியில் 49.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.