ஓட்டலில் நடந்த திருமண பார்ட்டியில் ‘டிஜே’ பாடலா வேணும்… இந்தா வாங்கிக்கோ! விருந்தினர்களுக்கு தர்மஅடி கொடுத்த ஊழியர்கள்

காசியாபாத்: காசியாபாத் ஓட்டலில் நடந்த திருமண பார்ட்டியில் டிஜே பாடல் கேட்ட விருந்தினர்களுக்கு, ஓட்டல் ஊழியர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் இரவு சுமார் 2 மணியளவில் ‘டிஜே’ பாடலுக்கு (வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இசைக்கப்படும் இசை) ஆட்டம் போட வேண்டும் என்று விரும்பினர். அதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் ‘டிஜே’ பாடலை ஒலிபரப்பச் செய்யும்படி கேட்டனர். ஆனால் அவர் டிஜே பாடலை ஒலிபரப்பச் செய்யவில்லை.  

அதனால் ஆத்திரமடைந்த விருந்தினர்களுக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. தொடர்ந்து ஓட்டலில் பணியாற்றும் 20 பேர், விருந்தினர்களை குச்சிகளால் அடித்து தாக்கினர். சிலருக்கு மண்டை உடைந்தது. மோதலை தடுத்துவிட சென்றவர்களுக்கும் அடி விழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘உத்திரபிரதேச மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு இறுதிச் சடங்குக்கு கொண்டு சேர்க்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து  ரூரல் டிசிபி ரவிக்குமார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் கைது செய்வோம். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.