Tamil Nadu Budget 2023-2024: சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023- 24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து அன்று பிற்பகல் சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி, நிதிநிலை அறிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் ஏற்கனவே பேசி தீர்வு காணப்பட்டது. அதில் எவ்வித குழப்பமும் இல்லை. மேலும் சட்டப்பேரவையை பொறுத்தவரை எந்த இருக்கையில் யார் உட்கார வேண்டும் என்பது தனது முழு அதிகாரத்திற்கு உட்பட்டது” என்றார்.
தொடர்ந்து, நிதி அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கை மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் உள்ளிட்டவை அலுவலக கூட்டத்திலே முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவை மாடத்தில் இருந்து தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த விவகாரம், உரிமை மீறல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான 2023-24 நிதி அறிக்கை வரும் மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்ட நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.